ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II(தொகுதி II மற்றும் IIஏ பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை II,சிறை அலுவலர்(பெண்கள் தனிச்சிறை), சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 41 ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் (குரூப் 2) மற்றும் முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், முதல்நிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர், கணக்கர், பண்டக காப்பாளர், செயல் அலுவர் நிலை II, செயல் அலுவலர் நிலை III, இளநிலை கணக்கர், ஆண் காப்பாளர், உதவியாளர் நிலை III, கீழ்நிலை செயலிட(முகப்பு) எழுத்தர் உள்ளிட்ட 780 ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான (குரூப் 2ஏ) என மொத்தம் 821 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாடத்திட்டம், தேர்வுத் திட்டம் ஆகியவை தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 9 ஆகும். விண்ணப்பக் கட்டணம் 100. (முதல்நிலை தேர்வுக்கு மட்டும்). கட்டணத்தை இணைய வழி முறையில் செலுத்தவும் எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தகுதி என்ன? குரூப் 2, 2ஏ அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு முடித்திருப்பது விரும்பத்தக்கது. மேலும் அந்தந்தப் பணியிடங்களுக்கு உரிய தகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 நிறைவாகி யிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி. (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), கைவிடப்பட்ட விதவைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி? இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போதே தேர்வு எழுத விரும்பும் மாவட்டங்களை குறிப்பிட வேண்டும்.
தேர்வு எப்படி நடைபெறும்? குரூப்-2 பதவிகளுக்கு விரித்துரைக்கும் வகையில் தமிழ் தகுதித் தாள் தேர்வு, பாடத் தேர்வு நடக்கும். குரூப்-2 ஏ பதவிகளுக்கு தமிழ் தகுதித் தாள் தேர்வு விரித்துரைக்கும் வகையிலும், பாடத் தேர்வு கணினி வழித் தேர்வாக கொள்குறி வகை வினா வடிவமைப்பிலும் நடத்தப்பப்படும். தேர்வுகளை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மய்யங்களில் நடைபெறும்.
குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு நவம்பர் 1- ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். ஓஎம்ஆர் வடிவில் விடைகளை குறிக்க வேண்டும். தகுதி பெற 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
