கடலூர், செப்.2- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. ரூ.700 வரை செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.26 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை கட்டணம் வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காட்டுமன்னார்கோவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல்றிந்து வந்த அதிகாரிகள், மின் அளவீடு செய்வதில் ஏற்பட்ட தவறு காரணமாக இருக்கலாம் என்றும், நேரில் மறுஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
