திருச்சி, செப்.2– மாநில அளவிலான டேக்வாண்டோ களத்தில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்று அசத்தல் சாதனைப் படைத்தார்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2026–2027ஆம் ஆண்டிற்கான பாரதியார் நாள் / குடியரசு நாள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் (State Level Sports & Games) விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் (Ramco Institute of Technology) கடந்த ஆகஸ்ட் 27 முதல் 30 வரை நடைபெற்றன.
இப்போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி எம்.லேவியா, 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ (Taekwondo) தற்காப்புக் கலைப் பிரிவில் திருச்சி மாவட்டத்தின் சார்பில் திறம்படப் பங்கேற்றுச் சான்றிதழ் பெற்றுள்ளார்.
மாநில அளவிலான கடுமையான தற்காப்புக் களத்தில் நேர்த்தியான நுணுக்கங்களையும் வீரியத்தையும் வெளிப்படுத்தி பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி லேவியாவையும், ஊக்கமளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சவுமியா மற்றும் கோகுல் ஆகியோரையும் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பணித் தோழர்கள் மனதாரப் பாராட்டினர்.
