நெல்லை, ஆக. 30- நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, அன்பு நகர் அருகே சித்தார்த்தர் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அய்.டி நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதிலயா (21) பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2023ஆம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் அவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் பயிற்சி முகாமுக்கு சென்று படித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு அவருக்கு மருத்துவப்படிப் பில் இடம் கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று முழு முயற்சியுடன் படித்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டு அவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றார். தற்போது நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதில் தேர்வானர்களின் பட்டியல் 27.8.2026 அன்று வெளியான நிலையில் அதில் ஸ்ருதிலயாவின் பெயர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஸ்ருதிலயா நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கச்சென்றார். நேற்று காலை அவரது அறையில் ஸ்ருதிலயாவை காணவில்லை என்றதும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து காம்பவுண்டு பகுதியில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே உள்ள ஷெட்டில் தூக்கிட்டு ஸ்ருதிலயா பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
