சென்னை, ஆக. 27- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 29) நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல்ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பை (இ-கேஒய்சி) மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21 சதவீத பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் பொருட்டு வரும் சனிக்கிழமை (ஆக. 29) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, தற்போதுவரை நியாயவிலைக் கடைகள் மூலம் விரல்ரேகைப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தித் தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
