1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 ஆம் தேதி, இதே நாளில் சேலத்தில் கூடிய தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் தான் அமைப்பின் பெயர் “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் எழுதி அண்ணாவால் முன்மொழியப்பட்ட வர லாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானத்தின் மூலம் பெயர்மாற்றம் மட்டுமல்லாது, இயக்கத்தின் பண்பும் மாற்றம் பெற்றது என்பதே வரலாறு!
அதுவரை தேர்தலில் போட்டியிட்டு வந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம், அதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடாத சமுதாயப் புரட்சி இயக்கமாக மாறியது.
இன்றைய தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் சமூக நீதி வளர்ச்சியில் திராவிடர் கழகத்தின் பங்க ளிப்பு முதன்மையானது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட இந்த நாள், தமிழ்நாட்டின் இந்த மாற்றங்களுக்கு ஒரு முக்கிய தொடக்கப் புள்ளியாகும்.
திராவிடர் கழகத்தில் இருந்து தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் முளை விட்டுக் கிளம்பின. எனினும், திராவிடர் கழகம் தேர்தல் போட்டியில் ஈடுபடாத தன்மையில் தொடர்கிறது.
திராவிடர் கழகமாக பரிணமித்த பிறகும் தான் எத்தனை எத்தனை சாதனைகள்?
இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்முறையாகத் திருத்தச் செய்து, பிற்படுத்தப்பட்டோருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் சமூகநீதியை உறுதிசெய்தது இந்த இயக்கம் தான்!

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்பதற்காகக் களத்தை உருவாக்கி வழிநடத்துவதும் இந்த இயக்கம் தான்!
பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி சலிப்பின்றிப் பரப்புரை செய்வது இந்த இயக்கம் தான்!
இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோல் திணிக்கப்பட்டதை எதிர்த்து ஒழித்ததும், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீட்டைப் பெற்றுப் பாதுகாத்துக் கொடுத்திருப்பதும் இந்த இயக்கம் தான்!
இந்தியா முழுமைக்கும் 27% இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கு வாங்கிக் கொடுத்திருப்பதும் இந்த இயக்கம் தான்!
தந்தை பெரியாருக்குப் பிறகு அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி என்று சரியான தலைவர்களால் வழிநடத்தப்பட்டு, போராட்டக் களம் என்றால் அது பெரியார் இயக்கம் தான் என்ற கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனது இந்த இயக்கம் தான்!
உலகப் பகுத்தறிவாளர் அமைப்புகளே வியக்கும் மாபெரும் மக்கள் இயக்கம் திராவிடர் கழகம் தான்!
அத்தகைய சிறப்புகளுக்குரிய இயக்கம், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என்று எல்லா வகையிலும் இன்னும் வீரியத்துடன் தோழர்களை உருவாக்கி, உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலத்துக்கும் பெரியாரைக் கொண்டு செல்லும் பணியில் முனைப்புடன் ஈடு படும் ஒப்புவமை சொல்ல முடியாத கருஞ்சட்டைத் தொண்டர்களின் செந்நீரா லும், உழைப்பாலும் நாளும் வலுப்பெறும் திராவிடர் கழகம் தோன்றிய நாள் இன்று!
திராவிடர் கழகம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? அணுகுமுறை என்ன?
திராவிடர் கழகம் ஓர் எதிர்ப்பு உணர்ச்சி ஸ்தாபனம் (A Revolting Spirit Organisation).
திராவிடர் கழகம் – இந்து சமுதாயத் துறையில்:
பார்ப்பன எதிர்ப்பு, வைதிக எதிர்ப்பு. மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாஸ்திர, புராண, இதிகாச எதிர்ப்பு, ஜோசியம், சகுனம், சடங்கு, யாகம் எதிர்ப்பு.
மதத் துறையில்…
கடவுள்கள் எதிர்ப்பு, கோவில், பூசை, உற்சவங்கள் எதிர்ப்பு, ஆன்மா, மேல் உலகம் எதிர்ப்பு, மோட்ச – நரகம் எதிர்ப்பு.
அரசியல் துறையில்…
பார்ப்பன ஆதிக்கம் எதிர்ப்பு, ஒன்றிய அரசாங்க ஆதிக்க எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு.
கல்வி கலை
இலக்கியத்துறையில்…
ஆரிய கலாச்சார, அனுஷ்டான, வர்ணா ஸ்ரம, மத கருத்துகள் புகுத்தும் கல்வி, கலை, இலக்கியம் எதிர்ப்பு
பொருளாதாரத் துறையில்…
சுரண்டப்படுதல், குவிக்கப்படுதல் எதிர்ப்பு.
இந்தத் தன்மையான எதிர்ப்பு உணர்ச்சி கொண்ட எந்த ஸ்தாபனங்களுடனும் திராவிடர் கழகம் இந்தக் காரியங்களுக்கு வேறு சிறு குறை இருந்தாலும் ஒத்துழைக்க முன்னிற்கும். இந்தத் தன்மைகளை ஆதரிக்காத – இலட்சியப்படுத்தாத உணர்ச்சி உள்ள ஸ்தாபனங்களுடன் ஒத்துழைக்காது என்பதுடன் எதிர்க்கவே முன்னிற்கும்.
அது கூட்டுறவு கொள்ளும் எந்த ஸ்தாபனத்தைப் பற்றியும், இந்தத் தன்மை களை முதலில் யோசித்துத்தான் அதன் தராதரத்தையும், முன் பின் நடத்தை யையும், லட்சியத்தையும் பார்த்து தான் உறவுகொள்ளும்.
சாதாரணமான அதாவது பெரிய லட்சியத்திற்காக சிறிய காரியங்களில் அவ்வப்போது முயற்சித்து அவ்வப்போது அடையும் முடிவுகளில் மாத்திரம், பொறுத்த காரியங்களில் மாத்திரம் இந்த லட்சியங்கள் முக்கியமாகக் கருதப்படாமல் இருக்கலாம்.
ஆனால், பொதுவாக அது (திராவிடர் கழகம்) எதிர்ப்பில் தான் உற்சாகமுள்ளதாக இருக்குமே தவிர, ஆதரிப்பை அவ்வள வாக விரும்பாததாகத்தான் இருக்கும்.
கழக உணர்ச்சி மக்களிடையில் பரப்பப்பட ஆதரிப்புக் காரியங்களில் ஈடுபடுவதைவிட, எதிர்ப்புக் காரி யங்களில் ஈடுபடுவதே பலன் தரத்தக்க தாகும் என்பது அதன் கருத்து. இதுதான் கழகத்தின் போக்கு என்பதை இளைஞர்கள் அறிவார்களாக.
‘‘விடுதலை’’, 7.4.1952
தகவல்: பாணாவரம் பெ.வீரமணி
