கன்சிராம் பிறந்த நாள் இன்று (15.3.1934)

2 Min Read

கன்சிராம் பிறந்த நாள் இன்று (15.3.1934)

பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தில் பிறந்த (15.3.1934)  கன்சிராம் புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) அறிவியல் உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு நடந்த சாதியப் பாகுபாடு களால் கொதிப்புற்றும்,  அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டும் தனது பணியைத் துறந்து முழுநேரச் சமூகப் பணியில் ஈடுபட்டார்.

கன்சிராம் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மூன்று முக்கிய அமைப்புகளை உருவாக்கினார். BAMCEF (1978) பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சமூக ஊழியர் கூட்டமைப்பு. இது அரசுப் பணியில் இருந்த படித்த ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தது. தலித் ஷோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி – இது அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு. பகுஜன் சமாஜ் கட்சி (BSP – 1984): “பகுஜன்” (பெரும்பான்மை மக்கள்) என்று அவர் அழைத்த எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கான அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

“அரசியல் அதிகாரம் என்பது அனைத்துப் பூட்டுகளையும் திறக்கும் மாபெரும் சாவி” என்று கருதிய  அவர் சமூக மாற்றத்திற்கு அரசியல் அதிகாரம் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

தனித்தனியாகப் பிரிந்து கிடந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களைப் “பகுஜன்” (வெகு மக்கள்) என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் கொண்டு வந்தார். வர்ணபேதத்தை அடிப்படையாகக்கொண்ட ராமன் பிறந்ததாக சொல்லப்படும் உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான மாயாவதி அவர்களை முதலமைச்சராக அமர வைத்துப் பார்ப்பனர் அல்லாதார் அரசியல் புரட்சிக்கு அடித்தளம் இட்டார்.  இந்தியாவின் சமூக நீதிப் பார்வைக்கு தந்தை பெரியார் மிகவும் முக்கியமானவர் என்பதை உணர்ந்து உத்தர பிரதேசத்தில் ‘பெரியார் மேளா’ நடத்தி வட மாநிலங்களுக்குத் தந்தை பெரியாரைக் கொண்டு சேர்த்தார். தொடர்ந்து தமிழ்நாட்டின் தந்தை பெரியாரின் கொள்கைகளையொட்டி திராவிடர் கழகத்துடன் இணைந்து செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு சென்னை மாங்கொல்லையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பெரியார் விழா எடுத்து, அந்த நிகழ்வில் கன்சிராம் அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதை ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் மொழிப்பெயர்த்து தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தார். ‘பகுஜன் சமாஜ் கட்சியையும் திராவிடர் கழகத்தையும் என்றைக்கும் பிரிக்க முடியாது’ என்று கூறியதுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவை வடபுலத்திற்கு வந்து பெரியாரியலை பரப்பவும் கேட்டுக்கொண்டார். ‘என்றும் ஆசிரியர் வீரமணிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம், எங்களுக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்’ என்று கொள்கை நட்பைப் பாராட்டினார். கன்சிராம் அவர்களின் உரையை  திராவிடர் கழகம் சார்பில் ‘இமயத்தில் பெரியார்’ எனும் நூலாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *