நியூயார்க், ஆக. 26– ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா நியூயார்க்கில் கலந்துகொள்ளும் மேடிசன் ஸ்கொயர் கார்டன் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் அமெரிக்க மதச்சார்ப்பற்ற அமைப்பின் ஆதரவாளர்கள் சார்பில் சியாட் மாகாண சோசலிச மதச்சார்பற்ற கட்சியின் செனட்டர் கஷ்மா சவாந்த் எழுதியுள்ள கடித்ததில் நியூயார்க் மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
மோகன் பாகவத், 1925-இல் தொடங்கப் பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவராவார். இந்த அமைப்பே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த முதுகெலும்பாக செயல்படுகிறது.
அதன் ஆரம்ப நாட்களிலிருந்தே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாஜி ஜெர்மனியைப் பார்த்து தங்களை உருவாக்கிக் கொண்டதுடன், பாசிச கருத்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, உழைக்கும் மக்களை ஒடுக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து அடித்தளமாகக் கொண்டுள்ளது.
2014-இல் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, காஷ்மீர் போன்ற பகுதிகளில் வெகுஜன ஒடுக்குமுறையும் வன்முறையும் கொடூரமாக அதிகரித்துள்ளதுடன், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட ஜாதி சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த உழைக்கும் ஏழை மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
பாஜக-ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இனப்படுகொலை மற்றும் இனவெறி கொண்ட இஸ்ரேலிய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கியுள்ளனர். இந்திய சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் உளவு பார்க்க இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தனது மேயர் பதவியைப் பயன்படுத்தி இந்த நிகழ்வை ரத்து செய்யவும், பாகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டிக்கவும் மறுப்பதன் மூலம், மம்தானி இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுடனும், பாலஸ்தீன மக்களுடனும் நிற்கத் தவறுகிறார். மோடியின் வலதுசாரி ஆட்சி டிரம்ப்பை விடவும் சர்வாதிகாரப் பாதையில் மேலும் தூரம் சென்றுவிட்டது,
அதை எதிர்த்து நிற்பது மதச்சார்ப்பற்ற அமைப்புகளின் பொறுப்பாகும். சியாட்டில் நகர மன்றத்தின் ஒரே சோசலிஸ்ட் உறுப்பினராக நான் பணியாற்றும் ஒரு தசாப்த காலத்தில், மோடி மற்றும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முஸ்லிம் எதிர்ப்பு, ஏழை எதிர்ப்பு குடியுரிமைச் சட்டங்களைக் கண்டித்து நாட்டின் முதல் தீர்மானத்தை நிறைவேற்றும் இயக்கங்களைக் கட்டியெழுப்ப எனது அலுவலகத்தைப் பயன்படுத்தினேன்.
மேலும், தெற்காசியாவிற்கு வெளியே ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான முதல் மற்றும் ஒரே தடையையும் வென்றெடுத்தேன். இந்தியாவில் உள்ள எனது தாய் மற்றும் குடும்பத்தினரைச் சந்திக்க எனக்கு விசா வழங்க மறுப்பதன் மூலம் மோடி அரசு என் மீது பழிவாங்கி வருகிறது.
பாகவத்தின் நிகழ்வை முடக்கக் கோரி மம்தானியிடம் வலியுறுத்தி வரும் ‘ஹிந்தூஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்’ ‘இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில்’ மற்றும் பிற அமைப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தனது கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நியூயார்க் நகர மேயர் மம்தானி மக்களைப் பிளவுபடுத்தும் அமைப்புகள் மற்றும் அதை முக்கியப் பிரமுகர்கள் தங்களின் நச்சுக் கருத்துகளைப் பரப்ப நியூயார்க் மண் என்றுமே இடம் தராது என்று குறிப்பிட்டிருந்தார்.
