விருதுநகர், ஆக. 20- ‘முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்’ என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக நேற்று (19.8.2026) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. ஆதாவது ரூ.35 ஆக இருந்த கொள்முதல் விலை தற்போது ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கூறுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் 101 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை ஆவின் நிர்வாகத்தால் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இதுவரை பால் கொள்முதலில் லிட்டருக்கு ரூ.35 அரசு வழங்கி வந்தது. தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு ரூ.41 வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், கொள்முதல் விலை ரூ.1 மட்டுமே உயர்த்தி வழங்கப்படும். ஊக்கத்தொகை என்பது அடிக்கடி வழங்கப்பட மாட்டாது. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். அவ்வாறு வழங்குவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தவித பயனும் இல்லை.
அதனால்தான், தனியாரிடம் பால் விற்பனை செய்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.50 வரை கொள்முதல் விலை கொடுக்கிறார்கள். ஊக்கத் தொகையும் 2 அல்லது 3 நாட்களுக்கள் வழங்குகின்றனர்.
இதனால் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகத்திடம் பால் கொடுக்காமல் தனியாருக்கு விற்பனை செய்கிறார்கள். அரசு அறிவித்துள்ள இந்த பால் கொள்முதல் விலை உயர்வு போதாது. லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினால் மட்டுமே பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்” என்று கூறினார்.
ஆராதனை, ஆரவாரங்களை எழுத்தில் சொல்லி மாளாது; துதிபாடிகளை தள்ளி வைப்பதே ஆட்சியாளர்களுக்கு நல்லது:
இந்திய கம்யூனிஸ்ட்
நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்
திருப்பூர் ஆக. 20- இந்திய கம்யூனிஸ்ட் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ‘‘சட்டமன்றத்தில் ஆட்சியாளர்களை நோக்கி எழுப்பப்படும் ஆராதனை, ஆரவாரங்களை எழுத்தில் சொல்லி மாளாது. சுயநல ஆதாய நோக்கத்துடன் செய்யப்படுகின்ற இதுபோன்ற ஆராதனைகளில், ஆட்சியாளர்கள் வழுக்கி விழுவதை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. அதிகாரத்தை பிடித்து தொங்குபவர்களின் சுயநல மனப்போக்கும், அதை நம்பி மயங்கும் ஆட்சியாளர்களின் மனப்போக்கும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவை.
குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய துதிபாடிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அவர்களை தள்ளி வைக்க வேண்டும். ‘‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’’ என்ற திருக்குறளை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். துதிபாடிகளை விலக்கி வைப்பதே ஆட்சியாளர்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மையை சேர்க்கும்’’ என்று கூறி உள்ளார்.
