புதுடில்லி, ஆக. 20- நாட்டில், மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்கு தண்டனை முறைக்கு மாற்றாக, வலி குறைந்த விஷ ஊசி செலுத்துவது போன்ற மாற்று வழிகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்குரைஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனுவில், தூக்கிலிடுவது என்பது மிகவும் வலி நிறைந்தது, கொடூரமானது, ஒருவர் தூக்கிலிடப்பட்டு மரணத்தை உறுதிசெய்ய 40 நிமிடங்கள் ஆகும், ஆனால், விஷ ஊசி போன்ற மற்ற முறைகளில் வெறும் அய்ந்து நிமிடங்களில் மரணம் நிகழும் என்றும் குறிப்பிட்டிருந்தார்
மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாட்டில், தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ததோடு, தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறது.
ஆனாலும், இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தற்போது அளித்திருப்பது இறுதி தீர்ப்பு அல்ல, எதிர்காலத்தில் அறிவியல், மருத்துவ, அனுபவரீதியான ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு தண்டனை முறைகள் உருவாக்கப்படுவதை, தற்போதைய ரிட் மனு தள்ளுபடி முடிவு ஒருபோதும் தடுப்பதாக இருக்காது, ஒன்றிய அரசு, மாற்று வழிகளை வல்லுநர் குழுவின் மூலம் ஆராயலாம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
மேலும், இந்த மனுவை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கான அவசியம் இல்லை என்றும் கூறிவிட்டது.
