புதுடில்லி, மே 4- உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
2014ஆம் ஆண்டு முதல் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியாவின் நிலை தொடர்ந்து சரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது இந்தியா 157ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். செய்தி அறைகளை முடக்குவதற்காக சங் பரிவார் அமைப்புகள் சட்டக் கட்டமைப்புகளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. அவதூறு சட்டங்கள், தேசிய பாதுகாப்பு விதிகள் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஆகியவை நீதிக்காகப் பயன்படுத்தப்படாமல், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.
பத்திரிகையாளர்கள் மீதான நடவடிக்கை: 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 36 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உபா போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் பல பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
பாஜக – ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை:
“சுதந்திரமாக செயல்படும் பத்திரிகை தண்டிக்கப்படும், கீழ்ப்படிபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்” என்பதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தியாக உள்ளது.
இதன் காரணமாக ஊடகங்களின் சில பிரிவுகள் ஆளும் தரப்பின் கருத்துகளை மட்டுமே எதிரொலிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பற்ற சூழல்:
பாஜக ஆளும் மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் தங்களது கடமையைச் செய்யும்போது கொல்லப்படும் அவலநிலை நிலவுகிறது.
இவ்வாறு கார்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
