புதுடில்லி, ஆக. 13- நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் முக்கியமான சட்டமுன்வரைவுகள் (மசோதாக்கள்) போதுமான விவாதங்கள் இன்றி, வெறும் சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங் களவை குழுத் தலைவர் டெரிக் ஓ’பிரயன் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் இந்தச் செயல் பாட்டைச் சாடியுள்ள அவர், “ஆளும் பாஜக அரசு, மேகி நூடுல்ஸ் சமைப்பதைப் போல மிக விரைவாகச் சட்டங்களை இயற்றி வருகிறது. சட்டம் இயற்றும் முறையை உடனடிச் சமையல் (Instant Cooking) போல் மாற்றிவிட்ட இந்த ஆபத்தான போக்கை, ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து கண்டிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
வெறும் 2 முதல் 10 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்: பட்டியல் வெளியீடு
தனது குற்றச்சாட்டை உறுதிப் படுத்தும் வகையில், மக்களவையில் மிகக் குறைந்த நேரத்தில் விவாதிக்கப் பட்டு நிறைவேற்றப்பட்ட 10 முக்கிய மசோதாக்களின் பட்டியலை டெரிக் ஓ’பிரயன் வெளியிட்டுள்ளார்:
சட்டமுன்வரைவு மசோதாக் களும் மக்களவையில் நிறைவேற்றப் பட்ட நேரமும்
கேரளா (பெயர் மாற்றம்)-2 நிமிடங்கள்
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு-2 நிமிடங்கள்
வங்கியாளர்களின் புத்தக சான்றுகள்-3 நிமிடங்கள்
வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள்-3 நிமிடங்கள்
நிதி ஒதுக்கீடு மசோதா-3 நிமிடங்கள்
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) வளர்ச்சி-3 நிமிடங்கள்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண் ணிக்கை அதிகரிப்பு-4 நிமிடங்கள்
தீர்ப்பாய சீர்திருத்தங்கள்-4 நிமிடங்கள்
கூட்டுறவு வளர்ச்சிக் கழகம்-4 நிமிடங்கள்
தேசிய கவுரவத்திற்கு அவமதிப் பைத் தடுப்பது-10 நிமிடங்கள்
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இத்தகைய முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் வெறும் 2 முதல் 10 நிமிடங்களில் நிறைவேற்றுவது “ஜனநாயகத்தின் மீதான வன்முறை” என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துறைகள் சார்ந்த மசோதாக்கள் குறித்து மற்றொரு முக்கிய குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
டெரிக் ஓ’பிரயன் சுட்டிக்காட்டிய தாவது:
“கேரளா பெயர் மாற்ற மசோதா மற்றும் கூட்டுறவு வளர்ச்சிக் கழக மசோதா ஆகியவை உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அமைச்சகத்திற்கு உட்பட்டவை. நாடாளுமன்ற நடைமுறைப்படி, ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் அவையில் இருக்க வேண்டும். ஆனால், அமித்ஷா அவையில் இல்லாதபோதே இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இறுதியாக, ‘இந்த மசோதா அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது’ என்று மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது.”
நாடாளுமன்றத்தின் கண்ணியத் தையும் ஜனநாயக மரபுகளையும் காக்க, மசோதாக்கள் மீது விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன
