கொப்பல், ஆக. 12- கருநாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவ இணையர் தங்கள் குழந்தை பிறந்த 6ஆவது நாளில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, ‘பன்னாட்டு சாதனைப் புத்தகத்தில்’ அந்த குழந்தையை இடம் பெறச் செய்துள்ளனர்.
கருநாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், கங்காவதிக்கு அருகே உள்ள சிறீராம்நகரை சேர்ந்தவர்கள் மருத்துவர்
ஏ.பவன் குமார் – மருத்துவர் வரலட்சுமி பாலா இணையர். இவர்களுக்கு கடந்த மே 1ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தப் குழந்தைக்கு அஞ்சூரி ராயங்கா திரிநயனி என பெயரிட்டனர்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியோடு நின்று விடாமல், அதன் எதிர்கால ஆவணங்களை விரைந்து பெற அம் மருத்துவ இணையர் திட்டமிட்டனர். அதன்படி, குழந்தை பிறந்த அடுத்த சில நாள்களிலேயே பிறப்புச் சான்றிதழைப் பெற்று, மே 6ஆம் தேதி (குழந்தை பிறந்த ஆறாவது நாளில்) வெற்றிகரமாக ஆதார் அட்டைக்கான பதிவை இணையதளம் மூலம் முடித்தனர்.
மிகக் குறைந்த நாள்களில் பச்சிளம் குழந்தைக்கு ஆதார் அட்டை எடுத்த இந்த அசாத்திய வேகத்தை பாராட்டி, பன்னாட்டு சாதனைப் புத்தகம் அதிகாரப்பூர்வ உலக சாதனையாக இதனை அங்கீகரித்துள்ளது.
இதற்கு முன், குழந்தை பிறந்து 15 நாள்களுக்கு பிறகு ஆதார் அட்டைப் பெறப்பட்டதே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது 6 நாள்களில் ஆதார் பெற்று 5 வயதுக்குட்பட்டோருக்கான முந்தைய உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது பன்னாட்டு சாதனை நிறுவனம் இந்த குழந்தைக்கு உலக சாதனை பதக்கமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்துள்ளது.
இது தொடர்பாக ஈ-தொலைக்காட்சி பாரத்திடம் பேசிய குழந்தையின் தாயாரான மருத்துவர் வரலட்சுமி, “எங்கள் மகள் பிறந்த 6 நாள்களுக்குள்ளேயே ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து, அதை பெற்றுக் கொண்டதில் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். நாங்கள் காட்டிய விழிப்புணர்வு மற்றும் விரைவான பதிவு நடவடிக்கையின் காரணமாகவே இந்த சாதனையை எங்களால் சாத்தியமாக்க முடிந்தது” என்றார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள தற்போதைய விதிமுறைகளின்படி, பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதாவது பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ‘பால்தார்’ எனப்படும் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. குழந்தைக்கு ஆதார் எடுக்க கைரேகையோ, கண்விழி ரேகையோ தேவையில்லை. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஏதேனும் ஒரு ஆதார் அட்டை மட்டுமே போதுமானது.
இந்த குழந்தைகளுக்கு 5 வயது மற்றும் 15 வயது பூர்த்தியாகும் போது, அவர்களின் கைரேகை மற்றும் கண்விழி ரேகையைப் புதுப்பிக்க வேண்டும் என்பது விதியாகும்.
