திருவனந்தபுரம், ஆக.11- நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதர’த்தின் ஆறு சரணங்களையும் பாடுவதை கட்டாயமாக்கி, ஒன்றிய அரசு கடந்த ஜனவரியில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது.
இந்தப் பாடலை எந்த வகையிலும் அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதா, நாடாளு மன்றத்தில் அண்மையில் நிறை வேற்றப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் சுதந்திர நாளையொட்டி ஒன்றிய அரசின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களுடன் வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டங் களையும் ஒருங்கிணைக்க ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான தேசிய அமலாக்கக் குழு தீா்மானித்தது.
இது தொடா்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலா்களுக்கும் ஒன்றிய கலாசாரத் துறை அமைச்சகம் அனுப்பிய தகவலில், அமிர்த பெருவிழா கொண்டாட்ட நிகழ்வுகளில் தேசியக் கொடியேற்றுவதுடன் வந்தே மாதரம் பாடலையும் முழுமையாக பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், கேரளத்தில் மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு மேற்கண்ட அறிவுறுத்தலுடன் மாநில தலைமைச் செயலா் விஸ்வநாத் சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்த விவகாரம் தொடா்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: சில நேரங்களில் ஒன்றிய அரசின் உத்தரவுகள் குறித்து மாநில தலைமைச் செயலா் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டியிருக்கும். அது அவரது கடமை. ஆனால், கேரளத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், விழாக்களில் முந்தைய நடைமுறையே பின்பற்றப்படும்.
அதாவது, வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும். கேரளத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட்டது. ஆளுநா் முன்னிலையில் விழா நடைபெற்றால் வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்பட்டது. அதேநேரம், மாநில அரசு நிகழ்ச்சிகளில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் பின்பற்றப்படாது என்றார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் உண்ணித்தான் கூறுகையில், ‘கேரளத்தில் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வேண்டுமென்ற தலைமைச் செயலரின் உத்தரவு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், கேரளத்தில் வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது என்பது இந்த ஜென்மத்தில் நடக்காது. பிரதமா் மோடி சுட்டுத் தள்ளுவதாக மிரட்டினாலும்கூட, வந்தே மாதரம் முழுமையாக பாடப்படாது. ஒன்றிய பாஜக ஆட்சியில், ஆளுநா் மாளிகைகள் ‘மலிவான’ அரசியல் மய்யங்களாக மாறிவிட்டன. பணபலத்தின் துணையுடன் ஜனநாயகத்தை சீா்குலைக்கும் வேலைகளில் ஆளுநா்கள் ஈடுபடுகின்றனா்’ என்று சாடினார்.
காங்கிரஸ் மீது விமா்சனம்
கேரள தலைமைச் செயலரின் உத்தரவை சுட்டிக்காட்டி, மாநில காங்கிரஸ் அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமா்சித்துள்ளது.
‘இத்தகைய உத்தரவின் மூலம் ஆா்எஸ்எஸ் கொள்கைக்கு மாநில அரசு அடிபணிந்துவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
கேரளத்தில் மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே பாடப்படும்; அதன் முழு வடிவில் பாடப்படாது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.முரளீதரன் கூறினார்.
