இந்த 2026–லும் இப்படியும் மூடத்தனத்துக்கு முழங்கால் தண்டனிட்டு வக்காலத்து வாங்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் அதன் சக்கரத்தின் கீழ் எலுமிச்சையை வைத்து பயணத்தை தொடங்குவது என்பது வாடிக்கையாக உள்ளது.
10 ரூபாய் எலுமிச்சை
ஏன் முக்கியம்..?
ஏழையோ, பணக்காரனோ புதியதாக வாங்கும்போதும் அல்லது ஒரு நீண்ட பயணத்தைத் மேற்கொள்ளும்போதும், வாகனத்தின் சக்கரங்களின் கீழ், எலுமிச்சை பழங்களை வைத்து பயணத்தை தொடங்குவது என்பது இன்றளவும் ஒரு வழக்கமாக உள்ளது. சிலர் வாகனத்தின் முன்பக்கத்தில் எலு மிச்சையை கட்டி தொங்கவிடுவதை எல்லாம் பார்த்து இருப்பீர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, ”ஏண்டா வண்டில இருக்குற நூத்துக்கணக்கான ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சையால ஓட போகுது” என விவேக் திரைப்படத்தில் நக்கலாக கேட்ட கேள்வி தான் நம்மில் பலரது நினைவிற்கு வரும். ஆனால், எலுமிச்சையின் பயன்பாடு என்பது மூட நம்பிக்கை அல்ல, நமது முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்ட அறிவியல் சார்ந்த வாழ்வியல் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? வைட்டமின் சி நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் B6 இரும்புச் சத்து இன்னோரன்ன உண்டு. மனித உடலுக்கு இவை எல்லாம் தேவைதான். கார் வாங்கியவுடன், அதன் சக்கரங்களில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதால் என்ன பயன்? விளக்கவேண்டாமா?
எலுமிச்சையை
நசுக்குவது ஏன்?
ஆரம்ப காலங்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நடப்பது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. மனிதனால் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு , மாட்டு வண்டி பயணங்களுக்கான பிரதான தேர்வாக மாறியது. அப்படி மாடுகள் பலதரப்பட்ட வழித்தடங்களில் செல்லும்போது அதன் கால்களில் காயங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தொற்றுக் கிருமிகள் ஏற்பட்டு மாடுகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம். மனிதருக்கும் கூட பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே மாடுகளின் நான்கு கால்களுக்கு அடியிலும் எலுமிச்சம் பழத்தை வைத்து மிதிக்க வைத்தார்கள். அப்படி செய்யும்போது எலுமிச்சையின் சாறு மாடுகளின் காலில் பட்டு, அதில் உள்ள தொற்றுக் கிருமிகள் அழிவதோடு, காயங்கள் ஏதேனும் இருந்தால் விரைவில் ஆறவும் உதவுமாம்.
அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளதா? Foot and Mouth என்ற நோய் வருகிறதே, மாடுகளுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்த பிறகுதானே இந்நோய் ஒழிந்தது!
பால் இல்லாமல் அழும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய பாலை குழவிக் கல்லுக்கு – அதாவது கடவுளின் தலையில் குடம் குடமாக ஊற்றி சாக்கடையில் கலக்கிறது.
மனித உடலுக்குத் தேவையான சில சத்துக்களைக் கொடுக்கும் எலும்மிச்சம் பழத்தை கார் சக்கரத்தில் வைத்து நசுக்குவது எல்லாம் கிரிமினல் குற்றமல்லவா!
இந்த இலட்சணத்தில் மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவதில் மட்டும் குறைச்சலில்லை!
– மயிலாடன்
