பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பு படிக்கும்போது, எனது ஆங்கிலப் பாட புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற ஒரு கதை.மனிதனின் பேராசைக்கு மிக விளக்கம் தந்த பாடம் – ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களது சிறுகதை…
‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் (காணி) தேவை?’ என்ற தலைப்பில் (How much land does a man require?)
ஒரு நாட்டின் அரசர் ஓர் அறிவிப்பு தருகின்றார்.
காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை, எனது நாட்டில் நிலங்களைச் சுற்றிச் சுற்றி அயராமல் ஓடுபவருக்கு அந்த நிலப்பரப்பு முழுவதும் இலவசமாக தரப்பட்டு, உரிமையாக்கப்படும் என்ற தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார்.
பேக்காம் என்ற ஒரு (ரஷ்ய) விவசாயி இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் மற்றவர்களோடு சேர்ந்து ஒடத் தொடங்கினார். பலரால் முடிந்தஅளவு ஓடி முடித்துக் கொண்டனர்; ஆனால் பேக்காம் ‘அதிக அளவு பரப்பு நமக்கு கிடைக்க, நிறுத்தாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால் மேலும், மேலும் அதிகப் பரப்புள்ள நிலத்தைப் பெறலாமே’ என்ற பேராசையில் தண்ணீர்கூட அருந்தாமல் மாலை வரைஓடி, சூரியன் மறையும்போது ஓடுவதை நிறுத்தியவுடன், கீழே சாய்ந்து விட்டார்.
எல்லோரும் கைதட்டினர்; அந்த வெற்றி வீரனை எழுப்பிவிட நடுவர் சென்றார். மூச்சுப் பேச்சில்லை; மரணம்தான் அவருக்குக் கிடைத்த பரிசு!
அவரை 6 அடி நிலத்தில் ஒரு குழி தோண்டி புதைக்கிறார்கள் – துக்கத்துடன்!
இப்போது சொல்லுங்கள் விடையை!
ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையான நிலம்?
அவன் ஓடி ஓடிச் சேர்த்த நிலமா? ஆறடி மண்ணா?
வாசக நண்பர்களே,
அதுகூட பழைய கதை. இப்போது அந்த ஆறடி கூடத் தேவையில்லை! எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலை நம்பிக்கையாளர்கள் சிலர் ‘‘அஸ்தி’’யாகச் சின்ன பாத்திரத்தில் வைத்து அவற்றை கும்பிடுகின்றார்.
பகுத்தறிவுவாதிகளோ, அதற்கும் தேவையின்றி மருத்துவமனைக்குப் பயன்படுவதற்கு மருத்துவர் களுக்கு பாடக் கருவியாகத் தங்கள் உடலை நன்கொடை வழங்குகின்றனர்!
1976இல் மிசா கைதியாக சென்னை சிறைகளில் நான் இருந்தபோது, பல ஆயுள் தண்டனைக் கைதிகள் – எங்களுக்குச்சேவை செய்யும் வகையில் பழகுவார்கள்; அவர்களில் கோவில்பட்டியைச் சார்ந்தஒரு பெரியவர் என்னிடம் புத்தகங்களைப் பெற்று, படித்து விட்டு, திரும்ப நன்றிகூறி கொடுப்பார். பண்புடன், பணிவுடன் நடந்து கொள்வார். ‘சிறை மொழியில் காணிக்கை வார்டன்’ – ‘Convict Warden’ என்ற சொல்லின் மருவு அது!
நான் ஒரு நாள் கேட்டேன்… ‘‘ஏங்க நீங்க இவ்வளவு நல்ல மனிதராக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது… பின் எப்படி, ‘என்ன குற்றம் செய்து கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார் ‘‘எல்லாம் ‘க்ஷணநேரக் கோபம்’ தான்! என் மனைவியைப்பற்றி ஒருவன் என் முன்னாலே இழிவுச் சொல் சொன்னதால் வந்த கோபம், ஆத்திரத்தினால் குத்தி விட்டேன்; செத்து விட்டான்’ என்ற கதையை கண்ணீர் ‘பொலபொல’வென விழும் நிலையில் கூறினார். அதன் பிறகு திருக்குறளை இங்கே வந்து படித்து வருகிறேன்’’ என்றார்.
இப்படிப் பல. எனவே நமது இன்பமும், துன்பமும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் மனநிலையைப் பொறுத்ததே!
தீதும் நன்றும் ‘பிறர் தரவாரா’. எனவே மூன்று ‘‘நஞ்சுகளை’’ முறிப்பதற்கு முயன்று பாருங்கள். நானும்கூட முயன்று கொண்டே இருக்கிறேன். மறந்து விடாதீர்கள்; அதே சமயம்
கோபப்படுவதில்கூட இரண்டு வகை உண்டு.
தேவையான கோபம் (நியாயமான கோபம்)
தேவையற்ற கோபம் (அர்த்தமற்ற கோபம்)
ஒரு மனிதனின் நியாயங்கள் அநியாயமாகப் பறிக்கப்படும்போது, அது தனி மனிதக் கோபமாக இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கும் அநியாயங்களை எதிர்க்கும் சமூகக் கோபமாக உருமாறினால், அதைவிட மனித சமூகத்திற்கு வேறு விடியல் ஏது?
யோசியுங்கள்!
