தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நம் ‘‘முரசொலி’ நாளேடு இன்று தனது 85ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து மிகவும் பாராட்டி வாழ்த்துகிறோம்.
வெறும் துண்டுக் கையேடாக 85 ஆண்டுகளுக்கு முன் நமது கலைஞர் பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது, உழைத்து இன்று அது பல நெருக்கடிகளையும் – ‘விடுதலை’, ‘தீக்கதிர்’ ஏடுகளைப் போல நெருக்கடி கால நெருப்பாற்றையும், சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி சாதனை சரித்திரம் படைத்துவரும் நாளேடு!
தனது எழுத்துக்காக ஒரு பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டில் ஏற்ற வைக்கப்பட்டது என்றால் (தோழர் முரசொலி செல்வம் எழுத்தாளர், ஆசிரியர் என்பதால்) அதுவே அதன் விழுப்புண்களின் விழுமியங்களில் ஒன்று.
‘முரசொலித்ததால் விடியல் அழைப்பு’ மக்களின் அடிமைத்தனத்திலிருந்து ‘விடுதலை’ கிடைத்து அது ‘குடிஅரசாக’ப் பரிமளிக்கும் என்பதை தலைப்புகள் மூலம் மக்களுக்கு உணர்த்திடும் மகத்தான அமைதிப் புரட்சிக்கான ஆயுதங்களில் ஒன்று!
திராவிடர்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டுப் பாதுகாப்பு பயணக் காவல் அரண்களில் ஒன்று.
நூறாண்டு காண விழையும் அதன் தோழமை ஏடான ‘விடுதலை’யின் சார்பாகவும், தி.மு.க.வின் தாய்க் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்து வாழ்த்தி மகிழ்கிறோம்.
ஆசிரியர் ‘விடுதலை’
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
11.8.2026
