சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நவீன வாழ்வியலில் தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊழியர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்த வாரத்தில் 2 நாட்கள் ஓய்வு என்பது அத்தியாவசியமானது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் சேவை தேவைப்படும் அரசு மற்றும் தனியார் துறைகளில், பொதுமக்களுக்கான பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் ஊழியர்களைச் சுழற்சி முறையில் (Rotational basis) பணியமர்த்தி இந்த 2 நாட்கள் விடுமுறையைச் செயல்படுத்தலாம் என்றும் மனுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தொழிலாளர் சட்டங்களின்படி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கட்டாய விடுமுறையாக உள்ள நிலையில், இந்த வழக்கு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். சேர்க்கை
சென்னை, ஆக.11–- தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed) படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று (11.8.2026) முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையவழியில் தொடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம்.
முக்கியத்தேதிகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஆகஸ்ட் 11, 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 20, 2026
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஆகஸ்ட் 25, 2026
மாணவர் சேர்க்கை: ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை
வகுப்புகள் தொடக்கம்: செப்டம்பர் 1, 2026
