புதுடில்லி, ஆக. 10–- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் நுகர்வோர்கள் அனைவரும் மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு (eKYC) முறையை நிறைவு செய்வது கட்டாயம் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நேரில் சென்று சரிபார்ப்பு
எரிவாயு இணைப்பு வைத்துள்ள நுகர்வோர்கள், தங்களுடைய எரிவாயு நுகர்வோர் புத்தகம் மற்றும் உரிய அடையாள ஆவணங்களுடன் (ஆதார் கார்டு உள்ளிட்டவை) தங்களுக்குரிய எரிவாயு விநியோக முகவர் அலுவலகத்திற்கு நேரில் சென்று eKYC செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
குறிப்பிடப்பட்டுள்ள ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் eKYC செய்யத் தவறினால், அந்த செயல்முறையை முடிக்கும் வரை மானிய விலையிலான உருளைகள் விநியோகிக்கப்பட மாட்டாது.
போலி இணைப்புகளைத் தடுக்க நடவடிக்கை
தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே மானியம் சென்று சேருவதை உறுதி செய்யவும், போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கவும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, வாடிக்கையாளர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, உடனடியாகத் தங்கள் எரிவாயு முகவரை அணுகி eKYC முறையைச் செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
