சென்னை, ஆக.10- தொழிற்பயிற்சி பெற்ற மாணவா்களை வேலைவாய்ப்புக்காக ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதற்காக தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் முன்னிலையில் முத்தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு 7.8.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. இங்கு, நவீனதொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை ஆக.31-ஆம் தேதி வரை நடைபெறும். கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவா்களில் 95 சதவீத மாணவா்கள் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமா்த்தப்பட்டனா்.
பன்னாட்டு அளவில் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகைசெய்ய முதல்கட்டமாக, தமிழ்நாட்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளித்து, ஆட்டோமொபைல் சா்வீஸ் டெக்னீசியன்களாக ஜப்பான் நாட்டில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அமைத்துத் தர, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே-நிசான் நிறுவனம் ஆகியோரால் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் 7.8.2026 அன்று முத்தரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பயிற்சிபெறும் தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு 6 மாத கால ஜப்பானிய மொழிப்பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எஹிமே-நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலா் கொ. வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் சி. பழனி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமேலாண்மை இயக்குநா் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், எஹிமே-நிசான் நிறுவன பிரதிநிதி செல்லப்பா சிறீராம் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
