சென்னை, ஆக. 9- சென்னை மாநகராட்சியில் புதிதாக 15 இடங்களில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் 993 பூங்காக்கள் உள்ளன. பூங்காக்கள் பராமரிப்பு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், அதில் ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து, பூங்கா ஒப்பந்தப் பணி ஊழியர்களுக்கு மாநகராட்சியே நேரடியாக ஊதியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் சென்னையில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 15 இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பூங்காவும் குறைந்தது 50 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் அரசு நிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் 4 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் ரூ.15 கோடியில் 11 இடங் களில் புதிய பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அந்தப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக பொறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
