திருப்பூர், ஆக.9 குப்பையால் நிரம்பிய கைவிடப்பட்ட பாறைக்குழிகள், இன்று திருப்பூரின் நிலத்தடி நீருக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளன. திட்டமிடாமல் கழிவுகளை கொட்டியதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டி, பழைய குப்பைகளை உடனடியாக அகற்றி மாற்று இடத்தை ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கைவிடப்பட்ட குவாரி குழிகளில் குப்பைகளைக் கொட்டியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கடும் உத்தரவு களைப் பிறப்பித்துள்ளது.
2024 இல்
தாக்கல் செய்த மனு
முதலிபாளையம், நல்லூர் உள்ளிட்ட பாறைக்குழிகளில் மாநகராட்சி திடக்கழிவுகள் கொட்டப்பட்டதால் நிலத்தடி நீர் மாசடைந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு செயலாளர் சதீஷ்குமார் 2024 இல் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், தமிழ்நாடு சிறு கனிம விதிகளின்படி குவாரிகளை சீரமைக்கும் விரிவான திட்ட அறிக்கையோ, தொழில்நுட்ப ஆய்வோ இல்லாமல் நேரடியாக குப்பைகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்ததாக தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
மனுதாரர் தாக்கல் செய்த ஒளிப் படங்களை ஆய்வு செய்த தீர்ப்பாயம், மழைநீருடன் கலந்து உருவாகும் ‘லீசெட்’ (நச்சுநீர்) நிலத்தடி நீரை கடுமையாக மாசுபடுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, குவாரி குழிகளில் ஏற்கெனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை விரைந்து அகற்றவும், நாள்தோறும் குப்பைகளைக் கையாள அங்கீகரிக்கப்பட்ட மாற்று இடத்தை உடனடியாக தேர்வு செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், குவாரி சீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை செப்.22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
