சென்னை, ஆக. 5- ‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது:
காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்து விட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்ப நேற்று (4.8.2026) காலையில் உதயநிதி வீட்டுக்கு வந்த காவல் படை, அவரை அராஜகமாகக் கைது செய்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினட் தகுதிபெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் திமுக தொண்டர் களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்து விடுவோம்’ என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்குரைஞர் சொல்லி இருக்கிறார்.
விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே நடத்தலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு பிணையில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? ‘உதயநிதியை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, தவெகவின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி.
உதயநிதி, தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை.யாரையும் குறிப்பிட வில்லை. அவர் பேசாத ஒன்றை பேசிய தாகச் சிலர் பரப்பியதை சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதய நிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும்.
உதயநிதி தவறுதலாகப்பேசுபவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.
ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதி களை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம்வரும் முதலமைச்சர், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும். ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
