மியான்மரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, பன்னாட்டு செஞ்சிலுவை சங்க பிரதிநிதியைத் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்
கடந்த 2021 பிப்ரவரியில் மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, வெளியுலகத் தொடர்பின்றி இருந்த ஆங் சான் சூகியை பன்னாட்டு பிரதிநிதி ஒருவர் சந்திப்பதும், அவரின் ஒளிப்படம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதும் இதுவே முதல்முறையாகும்
மியான்மர் அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு அதிகாரபூர்வமாக வெளியிட்ட ஒளிப்படத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மியான்மர் பிரதிநிதி அர்னாட் டி பேக்கை ஆங் சான் சூகி சந்தித்துக் கைகுலுக்குகிறார்
இச்சந்திப்பை வரவேற்றுள்ள ஆங் சான் சூகியின் இளைய மகன் கிம் ஆரிஸ், ‘கடந்த 5 ஆண்டுகளில் எனது தாயார் குறித்து வெளிவந்துள்ள முதல் நோ்மறையான செய்தி இது. எனினும், அனைத்து அரசியல் கைதிகளுடனும் அவர் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
பாகிஸ்தானில் அமைதிப்
பேரணியின்போது குண்டுவெடிப்பு 17 பேர் உயிரிழப்பு
சுவாத், ஆக. 4- வடமேற்கு பாகிஸ்தானில் அமைதிப் பேரணியின்போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் சுவாத் மாவட்டத்தின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரே ‘சுவாத் அமைதிப் பேரணி’ கடந்த 2.8.2026 அன்று நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் அய்ந்து பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இத்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறையினர் கூறினர்.
இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. கடந்த சில மாதங்களாகப் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்ததற்கு காவல்துறையினரின் செயலற்றத் தன்மையே காரணம் என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
