அயோத்தி, ஆக.3 ராமன் கோயிலில் நன்கொடை திருட்டு மற்றும் நிதி கையாடல் தொடர்பாக, முன்னாள் உத்தரப்பிரதேச அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவத் பகுதியைச் சேர்ந்தவரான பிரமோத் திவாரி, 1985 முதல் 1990 வரை உபி சுற்றுலாத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். ராமன் கோயிலில் தற்போதைய நன்கொடை திருட்டு மட்டுமின்றி, 1980-களின் இறுதியில் நடைபெற்ற செங்கல் பூஜைகளின் போதே இத்தகைய கையாடல்கள் தொடங்கின என்றார்.”பாஜகவில் உள்ள அனைவரும் காணிக்கை திருடர்கள் இல்லை; ஆனால் காணிக்கை திருடர்கள் அனைவரும் அந்த கட்சியில் தான் இருக்கிறார்கள்” என அவர் சாடினார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாகவே ராமன் கோயில் கட்டப்பட்டது என்றும், பாஜகவால் கட்டப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடிக்கு கோயிலை விட தேர்தலே முக்கியமாக இருந்ததால், கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு அவசர அவசரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனத் தெரிவித்தார். ராமன் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளராக சம்பத் ராய் இருந்த காலத்தில், காணிக்கை திருட்டு என்பது ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட செயலாகவே மாறிவிட்டது.
இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. கோயில் பெருமைகளைத் தனதாக்கிக் கொள்ளும் பிரதமர், இந்தத் திருட்டுப் பாவங்களில் இருந்தும் பொறுப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது என பிரமோத் திவாரி குற்றம் சாட்டினார்.
