புதுடில்லி, ஆக. 1-– சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் இயங்கி வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இறக்குமதி முனையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? இறக்குமதி முனையத்தின் விரிவாக்கத் திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும்? சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு வினியோகம் வழங்க என்ன செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது? என குழாய் வழியாக வீடுகளுக்கு சமையல் வாயு வழங்குவது குறித்தும். அதற்குத் தேவையான திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுஇறக்குமதிக்கு கூடுதல் வசதிகள் எண்ணூர் துறைமுகத்தில் அமைப்பது குறித்தும் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (30.7.2026) நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு ஒன்றிய பெட்ரோலி யம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் சுரேஷ் கோபி மக்களவையில் எழுத்து பூர்வமாக பதில் அளித்தார்.
தனது பதிலில் அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்த தகவல்கள் வருமாறு:
எண்ணூர் துறைமுகத்தில் உள்ள திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி முனையம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறன் ஆண்டுக்கு 5 மில்லியன் டன் ஆகும். ஆனால், தற்போது, அதாவது சென்ற 2025-20–26ஆம் ஆண்டில் 1.26 மில்லியன் டன் அளவுக்குத் தான் இயற்கை எரி வாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021-20–22இல் 14.3 சதவிதமாக இருந்த எண்ணூர் துறைமுக திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தின் செயல்பாடு கடந்த 2025–-2026ஆம் ஆண்டில் 25.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, முனைய இறக்குமதி வசதிகளின் திறனை இருமடங்கு அதிகரிப்பது என்பது முனையத்தின் அதிகரிக்கும் திறன்பயன்பாடு மற்றும் தொழில், வணிக சாத்தியக் கூறுகளைப் பொறுத்தது.
குழாய் வழியாக வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை களுக்கு எரிவாயு வழங்குவதற்காக உரிய குழாய் இணைப்பு தொகுப்பு உள்ளிட்ட வசதிகளை சென்னை-திருவள்ளூர் மாவட்ட புவியியல் பகுதிகளில் உருவாக்கிட அனைத்து நடவடிக்கைகளையும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று ஆணையம் அனுமதிக்கப்பட்ட நிறு வனங்களை நியமித்துள்ளது. டோரன்ட் கேஸ் நிறுவனம் சென்னையில் எரிவாயுக் குழாய் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்ற 31.5.2026 வரை, சென்னையில் குழாய் எரிவாயு இணைப்பை 5253 வீடுகளுக்கு வழங்கி உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் தமது பதிலில் தெரிவித்திருந்தார்.
