புதுடில்லி, ஜூலை 31- ‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்டது ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 பத்திகள்தான். ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ.இராசா கூறியுள்ளார்.
வந்தே மாதரம்’ பாடாவிட்டால்
தேசத் துரோகிகளா? – கனிமொழி கருணாநிதி
புதுடில்லி, ஜூலை 31- மக்களவையில் கனிமொழி கருணாநிதி பேசுகையில் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தேசபக்தி என்பது கட்டாயத்தின் பேரில் கொண்டுவரப்பட வேண்டிய ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், “வந்தே மாதரம் பாடலை ஒருவர் பாடவில்லை என்பதற்காகவே அவரைத் தேசத் துரோகி என்று முத்திரை குத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்? தேசபக்தியை அளவிட இத்தகைய அளவுகோல்களை நிர்ணயிப்பது ஜனநாயக முறைக்கு முற்றிலும் எதிரானது” என்று வாதிட்டார்.
மேலும், மாற்றுக் கருத்துடையவர்களை உடனே தேசத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டும் போக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, உண்மையில் ஆளும் பாஜ கட்சியின் இத்தகைய பிரிவினை வாத அணுகுமுறையே நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு எதிரானது என்று சாடினார்.
