புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்றத்தில் நேற்று (27.7.2026) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த அய்ந்து மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்குத் தாக்கலில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும் தனிநபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் 100 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியவர்கள் எண்ணிக்கை 142ஆக இருந்தது. 2022-2023 மதிப்பீட்டு ஆண்டில் இந்த எண்ணிக்கை 301ஆகவும், 2023-2024-இல் 284ஆகவும், 2024-2025-இல் 415ஆகவும் இருந்தது, 2025-2026இல் இது 576ஆக உயர்ந்துள்ளது.
வருமான வரிச் சட்டம், 2025 அல்லது முந்தைய வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் பில்லியனர் என்ற சொல்லுக்கு சட்டரீதியான வரையறை எதுவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அமைச்சர், வருமான வரி கணக்குத் தாக்கல்கள் மூலம் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும் தனிநபர்களை அரசு கண்காணித்து வருவதாகவும் கூறினார். செல்வ வரிச் சட்டம் 1957, கடந்த 2016 ஏப்ரல் 1 முதல் ரத்து செய்யப்பட்டதால், பில்லியனர்களின் மொத்தச் சொத்து குறித்த தரவுகளை அரசு பராமரிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மைய குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வின் (2023-2024) படி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வருமான ஏற்றத்தாழ்வு குறைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பெரும் செல்வந்தர்களின் (100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள்) எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்கு கணிசமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
