மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மகளிர் கைது

2 Min Read

கிண்டி, ஜூலை 23- மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனை யின்றி நிறைவேற்ற வலியுறுத்தி மகளிர் கூட்டமைப்பினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிபந்தனையின்றி நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றக்கோரி, மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு, அனைத்து பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய பெண்கள் அமைப்புகள் சார்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் கிண்டி சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே நேற்று (22.7.2026) நடந்தது.

முன்னதாக அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்க துணைத் தலைவர் வாசுகி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற் றது. இதனைத் தொடர்ந்து வாசுகி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாஜ கொண்டு வராது என்பதால் போராட்டம் நடத்துகிறோம். நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் இணைந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், மதவாதத்திற்கு எதிராகவும், இந்தப் போராட்டம் நடக்கிறது என பேசினார்.

பின்னர் அனைவரும் முழக்க மிட்டபடி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட புறப்பட்டனர். அப்போது அவர்களை காவல் துறையினர் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் பெண்களோ, தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர்  பெண்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் ஏற்ற முயன்றபோது, அனைவரும் ஏற மறுத்து சாலையிலே அமர்ந்து காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப் பினார். அப்போது மகளிர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றினர். அப்போதும் அவர்கள் மகளிருக்கு நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரிலே நிறைவேற்ற கோரி கோஷமிட்டபடியே சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, பொதுச்செயலாளர் அ.ராதிகா, பொருளாளர் ஜி.ராணி, நிர்வாகிகள் எஸ்.வாலண்டினா, பி.சுகந்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் மஞ்சுளா, தேசிய செயலாளர் ஏ.ஆர்.சாந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கத்தின் தலைவர் பிலோமினா, தமிழக பெண்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் ரமணி, இந்திய கிறிஸ்தவ பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின், மனிதி ஒருங்கிணைப்பாளர் செல்வி, வசுமதி, சுயாட்சி இயக்க நிர்வாகி மேரி லில்லிபாய் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் கிண்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *