புதுடில்லி, ஜூலை 19- மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘வியாபம்’ (Vyapam) ஊழல் முறைகேட்டில் பணி நியமனம் பெற்ற பொதுத்துறை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிபிஅய் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
கருநாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனம் ‘கருநாடகா ஆன்டிபயாடிக்ஸ் அன்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்’ (KAPL). இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக (Managing Director) அனுராக் தனயக் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் முன்னதாக, மத்தியப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய வியாபம் ஊழல் மூலம் மத்தியப் பிரதேசத்தின் மாநில அரசுப் பதவிக்கு வந்து பிறகு, ஒன்றிய அரசின் பதவிக்குச் சென்றவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் பணியில் போபாலைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மருந்து விநியோக ஒப்பந்தங்களை நீட்டிக்கவோ அல்லது சலுகைகள் வழங்கவோ நிர்வாக இயக்குநர் அனுராக் தனயக் ரூ.15 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நிறுவனம் இதுகுறித்து சிபிஅய் (CBI) அதிகாரிகளிடம் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் சிபிஅய் அதிகாரிகள் ரகசியத் திட்டம் தீட்டினர்.
முதற்கட்டமாக, லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியான ரூ.5 லட்சத்தை நொய்டாவில் வைத்து வாங்குவதற்கு அனுராக் தனயக் சம்மதித்துள்ளார்.
அதன்படி 15.7.2026 அன்று நொய்டாவில் வைத்து அந்தப் பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த சிபிஅய் அதிகாரிகள் அவரைப் பொறிவைத்து கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைதான அதிகாரி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
