டேராடூன், ஜூலை 18 உத்தாரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் 10,279 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில், காணிக்கைப் பணம் திருடப்பட்ட வழக்கில் கோயிலின் முன்னாள் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகசிய புகாரும்
சிசிடிவி கண்காணிப்பும்
ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் நவம்பர் வரை திறந்திருக்கும் இக்கோயிலுக்கு, சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை பணம் திருடப்படுவதாக பைரவ் சேனா சங்கம் சார்பில் காவல் துறையில் ரகசியமாக புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில், கடந்த ஜூன் 25-ஆம் தேதி காணிக்கை எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. அப்போது, கோயில் ஊழியரான பிரமோத் நவுடியால் என்பவர் காணிக்கை பணத்தை திருடுவது கண்டுபிடிக்கப்பட்டது இதுதொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, கடந்த 12-ஆம் தேதி பிரமோத் நவுடியாலை சிறப்புக் குழுவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் திருட்டு சம்பவத்தில் அவருடன் இணைந்து செயல்பட்ட கோயிலின் முன்னாள் அதிகாரி ராஜேந்திர சவுகான் என்பவரும் நேற்று (17.7.2026) கைது செய்யப்பட்டார்.
“இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில ஊழியர்கள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளதால், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களும் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.”
