புதுடில்லி, ஜூலை 18 முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடு விப்பதற்கான கொள்கையை 3 மாதங் களுக்குள் வகுத்து அறிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதுமை அடைந்த (70 வயதுக்கு மேற்பட்டவர்கள்) அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மனிதநேயமற்றது என்றும், இது குறித்து தீவிரமான மற்றும் அமைப்புரீதியான கவலைகள் நிலவுவதாகவும் கூறி, தேசிய சட்ட சேவைகள் ஆணையம் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் வருமாறு:
3 மாதங்களுக்குள் கொள்கை வெளியீடு: அனைத்து மாநில அரசு களும், யூனியன் பிரதேசங்களும் முதுமை அல்லது குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான பிரத்யேகக் கொள்கையை அடுத்த 3 மாதங்களுக்குள் வகுக்க வேண்டும்.
தெளிவான தகுதி அளவுகோல்கள்: இந்தக் கொள்கையானது கைதிகளை விடுவிப்பதற்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் அதற்கான நடைமுறை கட்டமைப்பைத் தெளிவாகவும், வெளிப் படையாகவும் வரையறுக்க வேண்டும்.
நோய்களுக்கான சீரான வரையறை: “குறிப்பாக, முன்கூட்டியே விடுவிப்பதற்குக் காரணமான ‘குணப் படுத்த முடியாத நோய்’ (Incurable Disease) என்பதற்கான தெளிவான மற்றும் சீரான வரையறையை இந்தக் கொள்கை வெளிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
நீதிமன்றம் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது: அரசியலமைப்புச் சட்ட ரீதியான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதை, அரசியலமைப்புச் சட்ட ரீதியான கடமையிலிருந்து விலகிச் செல்வதாகக் கருத முடியாது. சட்டமன்றம் அல்லது நிர்வாகத்தின் செயலற்ற தன்மையால் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அல்லது அமைப்புரீதியாக மீறப்படும் சூழலில், இந்த நீதிமன்றம் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
