புதுடில்லி, ஜூலை 15 மேனாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ. 3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, மேனாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 3-ஆம் தேதியே அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்ததால் அப்போது ஆஜராகவில்லை.
அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில்
லுக்அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை இன்று நீதிபதிகள் விக்ரம் நாத் சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
அரசு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எ.வ. வேலுவிற்கு முன் ஜாமின் அளித்த உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எ.வ.வேலு சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில் அவரது கடவுச்சீட்டை உடனடியாக சரண்டர் செய்யும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
எ.வ.வேலு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அரசியல் நோக்கில் இந்த வழக்கு தொடரப்படுவதாக குறிப்பிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் எ.வ.வேலுவை ஏற்கனவே அழைத்திருப்பதை நீதிமன்றம் குறிப்பிட்டு. தமிழ்நாடு அரசின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே, ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு எ.வ.வேலு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சிங்கப்பூர் இருந்து திரும்பிய மேனாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். தற்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
