புதுடில்லி, ஜூலை 14- பக்ரீத் அன்றோ அல்லது வேறு எந்த நாளிலும், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும், பசுக்கள் அல்லது கன்றுகளை வதைக்க (அறுக்க) தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (13.7.2026) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முழுமை யான தடை உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை (Special Leave Petition) விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
பக்ரீத் முதல் நாள் வந்த தீர்ப்பு
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சூர்ய பிரசாத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, “தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் மட்டுமன்றி, அனைத்து நாட்களிலுமே அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து பொது இடங்களில் மாடு, கன்று வெட்டுவதற்கு முழுமையான தடை விதிப்பதாக கடந்த மே 27 அன்று தீர்ப்பளித்தது. மே 28 பக்ரீத்திற்கு முந்தைய நாளோ, மறு நாளோ மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பசுவோ அல்லது கன்றோ கொல்லப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளரும், காவல்துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 1 அன்று அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் தரப்பில் வழக்குரைஞர் ஜெய் நரசிம்மன் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று (13.7.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார்.
சட்டங்களுக்கு முரணாக
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, 10 வயதுக்கு மேற்பட்ட, வேலை செய்வதற்கோ அல்லது இனப்பெருக்கத்திற்கோ தகுதியற்ற பசுக்களை, தகுதியான அதிகாரியின் சான்றி தழுடன் வதைக்க அனுமதிக்கும் ‘1958 ஆம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு’ முரணானது.
‘விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960’, ‘விலங்கு வதைத் தடுப்பு (கசாப்புக் கடை) விதிகள் 2001’, ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998’ மற்றும் அதன் 2023 விதிகள் ஆகியவை விலங்குகளை எந்தெந்த நிபந்தனைகளின் கீழ் வதைக்க வேண்டும் என்று முறைப்படுத்துகின்றனவே தவிர, முழுமையான தடையை விதிக்கவில்லை. ஆனால், முழுமையான தடையை விதித்ததன் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தின் அமர்வு, சட்டமன்றத்தின் சட்ட அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வகை பசுக்களை குறிப்பிட்ட இடங்களில் வதைக்க சட்டம் அனுமதிக்கும் போது, அதற்கு முரணாக நீதிமன்றம் உத்தர விட முடியாது.
சட்டப்பூர்வ விதிகளை
அரசாணை மீற முடியாது
அரசாணை மீற முடியாது
நீதிமன்றத்தின் முன் பரிசீல னையில் இல்லாத ‘அரசாணை எண் 1715’-அய் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் தடை உத்தர வைப் பிறப்பித்துள்ளது. ஆனால், நிர்வாக உத்தரவுகள் (அரசாணை) விலங்கு வதை தொடர்பான சட்டப் பூர்வமான விதிகளை மீறவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது.
அதேபோல, கோயம்புத்தூரில் பக்ரீத்தின் போது, பொது இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது தான் மனுதாரரின் (இந்து மக்கள் கட்சி) கோரிக்கை. ஆனால், ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான டிவிஷன் அமர்வு இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி, மனுதாரர் கேட்காத போதிலும், அங்கீகரிக்கப்பட்ட கசாப்புக் கடைகளிலும் கூட பசுக்களை வதைக்க ‘முழுமையான மற்றும் ஒட்டுமொத்த தடை’ விதித்துள்ளது.
தீர்ப்புக்குள்ளேயே முரண்பாடு
விலங்குகளை பொது இடங்களில் வதைக்கக் கூடாது, அங்கீகரி க்கப்பட்ட கசாப்புக் கடைகளில் மட்டுமே வதைக்க முடியும் என்று ஒரு பக்க தீர்ப்பில் சரியாகக் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், அதே நேரத்தில் பக்ரீத் அல்லது வேறு எந்த நாளிலும் பசுக்களையோ கன்றுகளையோ வதைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இது தீர்ப்புக்குள்ளேயே முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது
பொது இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக உயர் நீதிமன்றம் கூறி யுள்ளது. உண்மையில், பொது இடங்களில் வதை எதுவும் நடக்காது என்றும், மத ரீதியான பலி யிடுதல் அனைத்தும் பொதுமக்கள் பார்க்காத மூடிய இடங்களில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தனது பதில் மனுவில் தெளிவாகக் கூறியுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.
திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு
இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, “உயர்நீதிமன்ற உத்தரவின் கடைசி பத்தி (மாநிலம் தழுவிய தடையை விதித்தது), மேலோட்டமாகப் பார்க்கும்போதே ‘திருத்தப்பட வேண்டிய ஒன்றாக’ உள்ளது என்று குறிப்பிட்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மனுதாரர் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஒத்தி வைத்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம், தற்போது அமலில் உள்ள சட்டப்பூர்வ விதிமுறைகளின்படி, தகுந்த அனுமதியுடன் இறைச்சிக் கூடங்களின் செயல்பாடுகள் தடையின்றி தொடர வழி வகை செய்யப்பட்டுள்ளது.
