து யூயூ ஒரு மருந்து வேதியியலாளர் ஆவார். மலேரியா சிகிச்சை குறித்த அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆராய்ச்சி, பண்டைய சீன மருத்துவத்தில் வேரூன்றியுள்ளது. மலேரியா மருத்துவப் பயனாளிகளின் குருதியில் உள்ள பிளாஸ் மோடியம் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை விரைவாகக் குறைக்கும் ஆர்டிமிசினின் என்ற சேர்மத்தை அவர் கண்டுபிடித்ததன் மூலம், மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மருந்தியல் மாணவியாக, யூயூ மருத்துவத் தாவரங்களை வகைப்படுத்தவும், அவற்றிலிருந்து செயல்படும் மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்கவும், அவற்றின் வேதியியல் கட்டமைப்புகளைத் தீர்மானிக்கவும் கற்றுக் கொண்டார். தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், அவர் தெற்கு சீனாவின் மழைக்காடுகளில் பல ஆண்டுகள் செலவழித்து, மலேரியாவின் பேரழிவுகரமான விளைவு களையும், அந்நோய்க்கான பாரம்பரிய சீன சிகிச்சைகள் பற்றிய பண்டைய மருத்துவ நூல்களையும் ஆய்வு செய்தார்.
பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, யூயூவும் அவரது குழுவினரும், கி.பி. 400-ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் மலேரியாவின் அறிகுறியான விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்ட இனிப்புப் புழுக்கொல்லிச் செடியைப் பற்றிய குறிப்பைக் கண்டறிந்தனர். அவர்கள் ஆர்டிமிசினின் என்ற செயல்திறன் மிக்க சேர்மத்தைப் பிரித்தெடுத்து, அதைச் சோதித்து, தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர். இன்று உலக சுகாதார அமைப்பு, மலேரியாவுக்கு எதிரான முதல் நிலைத் தற்காப்பாக ஆர்டிமிசினின் கூட்டு சிகிச்சையைப் பரிந்துரைக்கிறது.
“ஒவ்வொரு விஞ்ஞானியும் உலகிற்கு உதவக்கூடிய ஒன்றைச் செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறார்,” என்கிறார் யூயூ.
2015-இல் அவருக்கும் அவரது இரண்டு சக ஊழியர்களுக்கும் கூட்டாக உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம், இந்தப் பிரிவில் நோபல் பரிசு பெற்ற முதல் சீனப் பெண்மணி என்ற பெருமையையும், எந்தவொரு பிரிவிலும் நோபல் பரிசு பெற்ற முதல் சீனப் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
