புதூரான்
ராமன் கோயிலுக்கு மக்கள் அளித்த பெரும் காணிக்கைகளும், மக்கள் கொட்டிக் கொடுத்த நன்கொடைகளும் எங்கே சென்றன என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகங்களின் மலைக்க வைக்கும் வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. எடுத்துக் காட்டாக டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘கேசவ் குஞ்ச்’ கட்டடத்தின் மதிப்பு ரூ.150 கோடி என அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறப்பட்டாலும், இன்றைய சூழலில் ஒரு ஒப்பந்ததாரர் அதைப் போன்றதொரு மாபெரும் கட்டடத்தை ரூ.500 கோடியில் கூட கட்டிமுடிக்க முடியாது என்பதே எதார்த்தம்.
டில்லி மட்டுமல்லாமல் மும்பை, நாக்பூர், இந்தூர், போபால் போன்ற நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள ஆர்.எஸ்.எஸ் கட்டடங்களை உற்றுநோக்கினால், அவை அய்ந்து நட்சத்திர விடுதிகளுக்கு இணையான சொகுசு வசதிகளுடன் காட்சியளிப்பதைக் காண முடிகிறது.
சிந்திக்க வேண்டிய முரண்பாடு
பீகார், உ.பி. உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கல்வி நிலை மோசமாக இருக்கும் சூழலில் இந்தப் பட்டியலில் ஓரளவு முன்னணியில் இருந்த மராட்டியமும் வந்துவிட்டது. இந்த ஆண்டு மராட்டியப் பள்ளிக்கல்வி தேர்வில் தேர்ச்சி விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் குறைவாக இருந்துள்ளது. அதே போல் மராட்டிய அரசு பள்ளிக் கல்வித்துறையை தனியார் மயத்துக்கு ஆதரவாக நிதி மிகவும் குறைத்து ஆசிரியர்கள் வரை ஒப்பந்தப் பணிக்கு என்ற மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.
ஒருபுறம், நாட்டின் கல்வி வளர்ச்சிக்கோ அல்லது தரமான ஆராய்ச்சிப் பணிகளுக்கோ போதிய நிதி ஆதாரம் இல்லை என்று அரசாங்கத் தரப்பில் கூறப்படும் வேளையில், மறுபுறம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் உள்கட்டமைப்பு பட்ஜெட்டுகளுக்கு மட்டும் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் நிதி குவிகிறது.
நாட்டின் கல்வி வளர்ச்சிக்கோ அல்லது உயர்தர ஆராய்ச்சிப் பணிகளுக்கோ நிதி ஒதுக்கீடு செய்ய பட்ஜெட்டில் போதிய பணம் இல்லை என அரசு கூறிவரும் நிலையில், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு மட்டும் இவ்வளவு பெரிய நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கிறது? ராமன் கோயிலுக்கு மக்கள் வழங்கிய காணிக்கைகள் எங்கே சென்றன?
பொதுமக்களின் ஆன்மிகப் பங்களிப்பும், நாட்டின் வரிப்பணமும் எங்கு, எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்ற வெளிப்படைத்தன்மை ஜனநாயகத்தில் மிக அவசியமானது. கல்வி மற்றும் நல்வாழ்வுக்கு நிதிப் பற்றாக்குறை நிலவும் ஒரு தேசத்தில், அரசியல் நிறுவனங்களின் இந்த ஆடம்பர வளர்ச்சி தீவிரமான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் உரியதாகும்.
