மதுரை, ஜூலை 7– இருசக்கர வாகன வாடகை நடைமுறைக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம் என்பது குறித்து மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த நவீன்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் இருசக்கர வாடகை வாகன சேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ இல்லை. ஆட்டோ ரிக்சா, டாக்சிகளைப் போல பைக் டாக்சி சேவைகள் தனித்து இயங்க முடியாது.
அவை முழுமையாக சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களை சார்ந்துள்ளன. ஆனால், அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்த கட்டுப்பாடுமின்றி தங்கள் டிஜிட்டல் தளத்தை இயக்கி வருகின்றன.
அதேசமயம் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதியப்படுவது போன்ற நடவடிக்கைகளால் ஓட்டுநர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.
எனவே, பைக் டாக்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்சி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்குமாறும், அதுவரை பைக் டாக்சி ஓட்டுனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் ‘‘பைக் டாக்சி நடைமுறைக்கு ஒன்றிய அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கி யுள்ளதாக தெரிகிறது.
மாநில அரசு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்? மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து மாநில அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இருசக்கர வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்? மாநில அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
Leave a Comment
