புதுடில்லி, ஜூலை 5 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
மொத்தம் 25 நாட்களில் 19 அமர்வு களாக இந்த கூட்டத்தொடர் நடத்த திட் டமிடப்பட்டுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்காக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளையும் கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மற்றும்
மகளிர் இடஒதுக்கீடு
இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அதிக கவனம் பெறும் 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதா (தொகுதி மறுவரையறை மசோதா) மீண்டும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு
தற்போதைய மக்கள்தொகை கணக் கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகுக்கிறது. இதன் மூலம் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு விரும்புகிறது. முன்னதாக 3-இல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்த இந்த மசோதா, தற்போது திருத்தங்களுடன் மீண்டும் வருகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல்
நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர், முதலமைச்சர்கள், ஒன்றிய மற்றும் மாநில அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால் அவையில் கடும் விவாதம் பறக்கும் எனத் தெரிகிறது.
கல்வித்துறையில் மாற்றங்களை நோக்கமாகக் கொண்ட ‘விக்சித் பாரத் கல்வி அதிஷ்டான் மசோதா’ மற்றும் ‘ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா’ ஆகியவையும் பட்டியலில் உள்ளன.
அரசியல் கணக்குகள் மற்றும்
உட்கட்சி மோதல்கள்
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு பாஜக எதிர்கொள்ளும் முதல் முக்கிய கூட்டத்தொடர் இதுவாகும். இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிவசேனா (உத்தவ் அணி) கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிருப்தி காரணமாக பாஜகவுக்குத் தாவி, தங்களைத் தனிக்குழுவாக அங்கீகரிக்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளனர்.
ஒன்றிய அமைச்சரவை மாற்றம்?
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, அதாவது வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் ஒன்றிய அமைச்சரவையில் எந்த நேரத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 3-இல் 2 பங்கு ஆதரவு தேவை என்பதால், ஆளும் கூட்டணி பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
