டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கருநாடகாவை சேர்ந்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பா ளருக்கு அரசு பதவி: தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தார் முதலமைச்சர் விஜய்.
* அயோத்தி இராமன் கோயில் நிதி மோசடி: திரிணாமூல் காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா கட்சிகளை உடைக்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக, சஞ்சய் ராவத், எம்.பி. பகிரங்க குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இராமன் கோவில் நன்கொடை முறைகேட்டில் 8 பேரை கைது செய்தது உ.பி காவல்துறை: ரூ.80 லட்சம் பறிமுதல்.
* என்சிஇஆர்டி 9ஆம் வகுப்பு புத்தகத்தில் ‘எஸ்.அய்.ஆர்’ – வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்த பாடம் அறிமுகம்.
* கட்சி மாறியவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்க மோடி அரசு முடிவு. சில அமைச்சர்களை நீக்கவும் திட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி அரசின் அமைச்சர், தனது சொந்த அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வெள்ளரிப் பண்ணைக்காக ரூ. 99 லட்சம் மானியம் பெற்ற செய்தி: வேளாண் துறை இணையமைச்சராக உள்ள பகீரத் சவுத்ரி, தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் உள்ள தனது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த வாரியத்தின் பதவி வழித் துணைத் தலைவராகவும் உள்ளார்; கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 467 ஒப்புதல்களில் இவருடையதும் ஒன்று;
* ஒன்றிய அரசின் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் அய்ஏஎஸ் அதிகாரியின் மனைவி, மகன் மற்றும் தாயார் பெயரும் உள்ளது. ஒன்றிய வேளாண் அமைச்சர் பகீரத் சவுத்ரி மட்டுமின்றி, மூத்த அய்ஏஎஸ் அதிகாரியும் அமைச்சகச் செயலாளருமான நரேஷ் பால் கங்வாரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரும், கடந்த அய்ந்து ஆண்டுகளில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (NHB) தோட்டக்கலை மானியங்களாக மொத்தம் ரூ. 1.16 கோடிக்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ‘பிரதான் கோ பேக்’ (PRADHAN GO BACK) பிரச்சாரத்தை தொடங்கியது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி – சிஜேபி (CJP). கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டம் என முடிவு.
தி இந்து:
* மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது. இந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாதிய அடையாளத்துடன் விரைவில் அடையாள அட்டைகள்: அமைச்சர் அறிவிப்பு. முகவரி, ஜாதி, இரத்த வகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு விரைவில் வழங்கும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* இந்தியக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அது குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும் வெளியுறவு அமைச்சகம் அளித்த விளக்கம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “கடவுச்சீட்டு இல்லையென்றால், ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்பதை துல்லியமாக எது தான் நிரூபிக்கும்?” என கேள்வி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘செல்வாக்கு மிக்கவர்கள்’ தப்பிக்க விடப்பட்டனர்: இராமன் கோயில் விசாரணையைச் சாடிய சங்கராச்சாரியார்; பாஜகவின் இந்துத்துவாவை ‘போலி’ என்று விமர்சனம். ஆரம்பத்திலிருந்தே இராமன் கோயில் விவகாரத்தில் தன்னிச்சையான முடிவுகளே எடுக்கப்பட்டுள்ளன. வேதங்களோ, சாஸ்திரங்களோ அல்லது மதத் தலைவர்களின் ஆலோசனைகளோ பின்பற்றப்படவில்லை. அரசியல் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்டு அறக்கட்டளை அமைக்கப்பட்டது; அதே சமயம் சாதுக்கள், மடாதிபதிகள் மற்றும் பூசாரிகள் ஒதுக்கிவைக்கப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
– குடந்தை கருணா
