புதுடில்லி, ஜூன் 24- ‘எல் நினோ’ தாக்கத்தால் நாட்டில் நடப்புப் பருவமழையில் 43 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பருவமழை நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது:
பலவீனமான வானிலை நிலை ஜூலை 2-ஆம் தேதி வரை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் கணித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் காரணமாக காரீப் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், விவசாயிகள் விதைப்பு செய்வதற்கு மிகக் குறைந்த காலமே உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். ஜூன் 22-ஆம் தேதி வரையிலான கணக்கீட்டின்படி, மொத்த விதைப்பு பரப்பளவில் காரீப் பயிர் விதைப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது. சோயாபீன்ஸ் தவிர, மற்ற பெரும்பாலான பயிர்களின் விதைப்பு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட அதிகமாக, அதாவது 11.99 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், மகாராட்டிரா, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள 315 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
111 மாவட்டங்களுக்கு அதிக ஆபத்து
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், 25 சதவீதத்திற்கும் குறைவான நீர்ப்பாசன வசதி கொண்ட 111 மாவட்டங்கள் மிக அதிக பாதிப் புக்குள்ளாகக்கூடியவை என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
அவசரகாலத் திட்டம்
குறைந்த மழைப்பொழிவைச் சமாளிக்கும் வகையில் மாநில வாரியான அவசரகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்: குறைந்த நீர் தேவைப்படும் பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறு தானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். ஒரே பயிரை நம்பியிருக்காமல், குறுகிய கால மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய மாற்று விதை வகைகளைப் பயன் படுத்துமாறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
