பாட்னா, ஜூன் 22 பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற 9 பேரை பீகார் மாநிலம் லக்கிசராய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பீகார் மாவட்டம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் நேற்று (21.6.2026) நடைபெற்ற நீட் மறுதேர்வின்போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு மய்யத்திற்குள் நுழையும் போது நடத்தப்பட்ட பயோமெட்ரிக் சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பில் 9 பேரின் அடையாளங்களில் சந்தேகம் எழுந்தது.
உடனடியாக தேர்வு மய்ய கண்காணிப்பாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆள்மாறாட்டம் செய்த 9 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக பணம் பெற்றுக்கொண்டு வேறு நபர்கள் தேர்வு எழுத வந்தது தெரியவந்துள்ளது.
விசாரணை வளையத்தில் 12 பேர்
இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேர் தவிர, தேர்வு மய்யத்தில் பணியில் இருந்த பயோமெட்ரிக் ஆபரேட்டர்கள் உள்பட 12 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயோமெட்ரிக் சரிபார்ப்பையும் மீறி ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
காவல்துறை தகவல்
இதுகுறித்து லக்கிசராய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “தேர்வு மய்ய கண்காணிப்பாளர்களிடம் இருந்து முறையான புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த மோசடியின் பின்னணியில் உள்ள இடைத்தரகர்கள் யார், பண பரிமாற்றம் நடந்ததா என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.
முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த மறுதேர்வுக்கு ராணுவம் உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் ஆள்மாறாட்ட மோசடி நடந்திருப்பது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. தேசிய தேர்வு முகமை இதுகுறித்து விரிவான அறிக்கை கோரியுள்ளது.
