புதுடில்லி, ஜூன் 17 வெளிநாடு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அவரே இரண்டு முறை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதே போன்ற ஒரு சூழல் தான் தற்போது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளிலும் எதிரொலித்து வருகிறது.
இறக்குமதி வரிகளை உயர்த்தி, தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் இந்தியாவில் தங்கம் இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34 சதவீதம் உயர்ந்த தங்கம் இறக்குமதி
பன்னாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மிக அதிகமாகக் காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் தங்கம் மட்டுமே 5 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த அதிரடி உயர்வு காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதி ––- இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம்) 28.21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவிற்குத் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. மற்ற நாடுகளின் பங்களிப்பு விவரம் பின்வருமாறு:
சுவிட்சர்லாந்து: 40 சதவீதம் (முதலிடம்), அய்க்கிய அரபு அமீரகம் 16 சதவீத்துக்கும் மேல் (இரண்டாமிடம்)தென்னாப்பிரிக்கா: சுமார் 10% இருப்பினும், ஒன்றிய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மே மாதத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 57.73 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி இறக்குமதி
தங்கம் இறக்குமதி இப்படி எகிறியுள்ள நிலையில், வெள்ளி இறக்குமதி தலைகீழாகச் சரிந்துள்ளது. கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளி இறக்குமதி, இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 86.65 சதவீத வீழ்ச்சியாகும்.
பிரதமரின் அறிவுரைகளையும், அரசின் வரி உயர்வையும் தாண்டி, இந்திய சந்தையில் தங்கத்திற்கான மிரட்டலான தேவை நீடித்து வருவதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
