கோவை, ஜூன் 13- பள்ளி மாணவர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி வந்த தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவரை, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (35) என்பவர், கோவையில் தங்கி காளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது வகுப்பில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களின் கைப்பேசி எண்களுக்குத் தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி வந்துள்ளார்.
இதனை ஒரு மாணவனின் பெற்றோர் தற்செயலாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சக மாணவர்களின் பெற்றோர்களிடமும் அவர்கள் விசாரித்தபோது, ஆசிரியர் பாபு பல மாணவர்களுக்கும் இதுபோன்று ஆபாசப் படங்களை அனுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டது உறுதியானது.
போக்சோ சட்டத்தில் கைது
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் அனைவரும் ஒன்றிணைந்து ராமநாதபுரம் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோரின் புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல் துறையினர், மாணவர்களுக்கு ஆபாசப் படம் அனுப்பிய ஆசிரியர் பாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே இந்த அவலச் செயலில் ஈடுபட்டது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
