சென்னை, ஜூன் 11 தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள இந்த அரசாணை, கடந்த 2023-2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் தொகுப்பில் இருந்து சில பணியிடங்களைச் சரண் செய்து, அதற்கு ஈடாகப் புதிய உடற்கல்வி பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன: சரண் செய்யப்பட்ட பணியிடங்கள்: 830 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் + 800 தூய்மைப் பணியாளர் பணியிடங்கள். உருவாக்கப்பட்டுள்ள புதிய பணியிடங்கள்: 1,625 (1,328 உடற்கல்வி ஆசிரியர்கள் + 297 உடற்கல்வி இயக்குநர்கள்). புதிய பணியிடங்களை நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித் துறை எடுத்துள்ள முடிவுகள்: உடற்கல்வி ஆசிரியர் (1,328 பணியிடங்கள்) நேரடி நியமனம் (ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்). உடற்கல்வியில் 2 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமா அல்லது ஹையர் கிரேடு பெற்றிருக்க வேண்டும். முன்பு நடைமுறையில் இருந்தது போல, பி.பி.எட் மற்றும் பி.பி.எஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு இனி விண்ணப்பிக்க இயலாது. உடற்கல்வி இயக்குநர் – கிரேடு 2 (297 பணியிடங்கள்) 100 சதவீத பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படும். மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பதவிக்கு எம்.பி.எட் (M.P.Ed) பட்டப்படிப்பு அவசியம்).
