சென்னை, ஜூன் 10- பிளஸ்-2 முடித்தவர்கள் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிஃலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2026-2027Mம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் (Diploma in Co-operative Management) சேர இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். குறைந்த பட்சம் 17 வயதுபூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.
தகுதியுடைய நபர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இணைய வழியில் விண்ணப் பத்தைத் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள் மற்றும் ஒளிப்படத்தை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணைய வழியில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நேரடியாகவோ அஞ்சல் மூலமோகூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
பயிற்சிக்காலம் ஓராண்டு. 2 பருவத் தேர்வுகளை (செமஸ்டர்) உள்ளடக்கியது. பயிற்சிக் கட்டணம் ரூ.20,750. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்கள் தமிழ்வழியில் மட்டும் நடத்தப்படும். வகுப்புகள் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும். கூடுதல் விவங்களுக்கு 90427-17766 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர் பதவியிலும், மாவட்ட ஒன்றிய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கூட்டுறவு வங்கிகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளில் சேரவும் ஆவின் நிறுவனத்தில் நிர்வாகி பணியிடத்தில் சேரவும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
