மதுரை, ஜூன் 8- மதுரை விருந்தினர் மாளிகையில் 6.6.2026 அன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில எரிசக்தி, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.
“திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அரசு மிகவும் தெளிவாக உள்ளது. பெரும்பாலான மக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன அமைதியான சூழல் இருந்ததோ, அதுவே நீடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அரசும் அதையேதான் நினைக்கிறது.
2 ஆண்டுகளுக்கு முன் என்ன நிலை இருந்ததோ, அதே முந்தைய நிலைதான் தொடர வேண்டும். எந்தவொரு மதவாத சக்திகளும் உள்ளே நுழைந்து அரசியல் செய்ய 100 சதவீதம் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
‘எய்ம்ஸ் கட்டும் நேரத்தில் ஒரு அணையே கட்டியிருக்கலாம்’ – ஒன்றிய அரசு மீது காட்டம்
தொடர்ந்து அவனியாபுரத்தில் மாலையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:
மதுரை விமான நிலைய விரிவாக்கம்: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தாமதமாகி வருகின்றன. எனினும், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளை எடுக்கும்போது மறுசீரமைப்புப் பணிகள் அவசியமாகிறது.
மதுரை எய்ம்ஸ் தாமதம்: ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களை விரைவில் மதுரைக்கே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 9 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இவ்வளவு காலத்தில் ஒரு அணையைக் கூட கட்டி முடித் திருக்கலாம். எனினும், விரைவில் பணிகளை முடித்து எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் ஒன்றிய அரசு மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பையும் அதிருப்தியையும் காட்டுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ‘டிஜிட்டல் இந்தியா’ எனப் பெருமை பேசும் ஒன்றிய அரசு, தேர்வு எழுதச் செல்வபர்களின் காதில் இருக்கும் தோட்டைக்கூட கழற்றச் சொல்லி சோதனை நடத்துகிறது.
ஆனால், தேர்வில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதைவிட வெட்கக்கேடானது எதுவும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசினார்.
