சென்னை, ஜூன் 5 மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு இடையே, காங்கிரஸ் கட்சியுட னான கூட்டணியை திமுக அதிகாரப் பூர்வமாக முறித்துக் கொண்டுள்ளது. இதன் எதிரொலியாக, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் தனியாக அமர்வதற்கு மக்களவை செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி அதிரடியாக விலகியது. மேலும், தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அளித்தது. இந்த அரசியல் திருப்பத்தைத் தொடர்ந்து, காங்கிரசுடனான தங்களது கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக அறிவித்தது. கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு திமுக மக்களவை குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. அவசர கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: “மாறிவரும் அரசியல் சூழலால் காங்கிரஸ் கட்சியுடனான எங்கள் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தற்போதைய இருக்கை அமைப்பில் அமர்வது பொருத்தமற்றது. ஆகவே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் இல்லாத தனி இருக்கை அமைப்பை ஒதுக்கித் தர வேண்டும்.” திமுகவின் இந்த கோரிக்கையை மக்களவை செயலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமரும் பகுதிகளில் இருந்து விலகி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக இருக்கை அமைப்பை அது ஒதுக்கியுள்ளது. தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய இடங்களில் வசதியாக அமர்வதற்கான தனி இருக்கை மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
