வாசிங்டன், ஜூன் 3 இந்தியா உள்ளிட்ட 54 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்மீது கூடுதலாக 12.5 சதவிகித கூடுதல் வர்த்தக வரி விதிக்கப்போவதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஸ்டிஆர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் மற்றும் கட்டாய உழைப்பு (Forced Labour) மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடை விதிக்காததால், இந்த கூடுதல் வரியை விதிக்க உள்ளதாக அமெரிக்கா காரணம் கூறியுள்ளது.
உலக அளவில் மொத்தம் 60 நாடுகளில் நடத்திய விசாரணையின் அடிப்படையில், இந்தியா, சீனா, ஜப்பான், பிரிட்டன், பிரேசில், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா உள்ளிட்ட 54 நாடுகளில் கட்டாய உழைப்புப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ள தாக அமெரிக்கா கூறி யுள்ளது.
அதேபோல கட்டாய உழைப்புப் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்திருந்தாலும், அந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்தாத கனடா, அய்ரோப்பிய ஒன்றியம் (EU), மெக்சிகோ, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈக்வடார் ஆகிய 6 நாடுகளுக்கும், 10 சதவிகித கூடுதல் வரி விதிக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்த வரி விதிப்பு தொடர்பாகப் பாதிக்கப்படும் நாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க காலக்கெடு விதித்துள்ள அமெரிக்கா, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விரும்புபவர்கள் ஜூன் 22-க்குள் அதனைத் தெரிவிக்க வேண்டும் என்றும், எழுத்துப்பூர்வமான கருத்துக்களைச் சமர்ப்பிக்க ஜூலை 6 கடைசி நாள் என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ பொது விசாரணைக் கூட்டத்தை ஜூலை 7 அன்று நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.
“அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் கட்டாய உழைப்புப் பொருட்களைத் தடுக்கத் தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் உலக சந்தையில் ஒரு நியாயமற்ற போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வேறுபாட்டை அமெரிக்கா இனி பொறுத்துக் கொள்ளாது,” என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மீது நடத்தப்படும் விசாரணையை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது போன்ற சிக்கல்களை இருநாடுகளுக்கு இடையேயான நேரடி வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் (Bilateral Talks) மூலம் மட்டுமே பேசித் தீர்க்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
