ராம்ஸ்வரூப் வர்மா வாழ்க்கைக் குறிப்பு

2 Min Read

ராம்ஸ்வரூப் வர்மா (22 ஆகஸ்ட் 1923 – 19 ஆகஸ்ட் 1998) ஒரு இந்திய மனிதநேயவாதி ஆவார். இவர், ‘அர்ஜக் சங்’ (Arjak Sangh) எனும் மனிதநேய அமைப்பினை 1968இல் தொடங்கி அதன்  நிறுவனராகத் திகழ்ந்தார். இவ்வமைப்பு சமூக சமத்துவத்தை வலியுறுத்துவதுடன், பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்த்தது. வர்மா கடவுள் மற்றும் ஆன்மாவின் இருப்பை மறுத்தார். கர்மக் கோட்பாடு மற்றும் விதிவாதம் ஆகியவற்றிற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பார்ப்பனியம் மற்றும் தீண்டாமைக்கு எதிராக வர்மா அயராது பிரச்சாரம் மேற்கொண்டார். அவரைப் பொறுத்தவரை, பார்ப்பனியம், மறுபிறவிக் கோட்பாட்டில் ஆழமாக வேரூன்றி உள்ளது; எனவே, மறுபிறவிக் கோட்பாட்டைத் தாக்காமல் பார்ப்பனியத்தை  முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியமற்றது. பார்ப்பனியத்தை சீர்திருத்துவது இயலாது என்றும், அது முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் வர்மா உறுதியாக வலியுறுத்தினார்.

மகாமனா (மாமனிதர்) என அழைக்கப்பட்ட இராம்ஸ்வரூப் வர்மா அவர்கள் 1949ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் முதுகலைப் பட்டமும், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார். இரு தேர்வுகளிலும் முதல் வகுப்பில் முதல் இடத்தைப் பெற்று சிறப்பித்தார். இந்திய நிர்வாகப் பணிக்கான (IAS) எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தபோதிலும், சமூக மாற்றத்தை ஒரு சுதந்திரமான குடிமகனாக முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நிர்வாகப் பணியைத் தேர்ந்தெடுக்கவில்லை.

ஆச்சார்ய நரேந்திர தேவ் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா போன்ற சோசலிசத் தலைவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு பலமுறை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டு சரண் சிங் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகவும் பணியாற்றினார்.

அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவம் மட்டுமே போதாது; சமூக மற்றும் பண்பாட்டுப் புரட்சியும் அவசியம் என்பதை உணர்ந்த அவர், 1968 ஜூன் 1ஆம் தேதி அர்ஜக் சங்கத்தை நிறுவினார். மேலும், “அர்ஜக் சாப்தாஹிக்” என்ற ஹிந்தி வார இதழைத் தொடங்கி அதன் தலைமை ஆசிரியராகவும் செயல்பட்டார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனைகளால் ஆழமாகத் தாக்கம் பெற்றிருந்த இராம்ஸ்வரூப் வர்மா, மனிதநேயம், சமூகநீதி மற்றும் பகுத்தறிவை பரப்பும் பணியில் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தார். நூல்கள், கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலமாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த ஓய்வின்றி (tireless-ஆக) உழைத்தார்.

சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் அர்ஜக் சங்கத்தின் நிறுவனர் என்ற பெருமையுடன் நினைவுகூரப்படும் இராம்ஸ்வரூப் வர்மா அவர்கள், தனது இறுதி மூச்சு வரை மனித விடுதலைக்கான பணியில் ஈடுபட்டு, 1998 ஆகஸ்ட் 19ஆம் நாள் லக்னோவில் காலமானார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *