சென்னை, மே 31 ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் பூசப்பட்ட சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகை எனப்படும் ஆளுநர் மாளிகையில் (லோக் பவன்) நேற்று (30.5.2026) நடந்த திருவள்ளுவர் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம் பூசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவிற்காக ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்திருப்பதைப் போன்றும், அவரது நெற்றியில் பட்டை இருப்பது போன்றும் ஒளிப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும், விழாவின் தொடக்கத்தில் இந்த ஒளிப்படத்திற்குப் புதிய பொறுப்பு ஆளுநரான அர்லேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநரின் இந்த செயல் இணையத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு தங்கள் கடும் கண்டனங்களையும், விமர் சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, முன்னாள் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியில் இருந்தபோதும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்திற்கு இதேபோன்று காவிச் சாயம் பூசப்பட்ட திருவள்ளுவர் ஒளிப்படத்திற்கு அவர் மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையாக மாறி கண்டனங்கள் வலுத்தது.தற்போது அதே சர்ச்சைக்குரிய ஒளிப்படத்தை வைத்து, பொறுப்பு ஆளுநர் அர்லேகரும் இதே செயலை மீண்டும் செய்திருப்பது மக்கள் மத்தியிலும் அரசியலிலும் மிகப்பெரிய கண்டனங்களை ஏற்படுத்தி விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: எப்போதுமே மியூட்-ல இருக்கிறவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடிச்சு இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது. ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது? தி.மு.க ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம்.

சங்கிகளை திருத்துனோம். இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப் பார்க்குறாங்க. வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் – அதை அனுமதிக்கும் சோபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட அனுமதி கொடுங்கன்னு டில்லியில கேட்ட மாதிரி, இந்த விசயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு விசயத்துல தான் முதலமைச்சர் அமைதியா இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்?. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
